(இ - ள்.) ஆய்ந்த மறை ஓதி அதன் ஆரிடம் அறிந்தான் - சான்றோரான் ஆராயப்படட நான்கு மறைகளையும் நன்கு ஓதி அம்மறையகத்தவாகிய இருடி வாசகங்களையும் நன்கு அறிந்தவனாகிய வேள்வியாசான், சாந்து மெழுகிட்ட தடமாமணி நிலத்தைச் சேர்ந்து - முன்னரே நறுமணச் சாந்தால் நன்கு மெழுகப்பட்டு விரிந்துள்ள சிறந்த மணிகள் பதித்த தரையை எய்தி, பொன்னியல் சலாகை நுதி தீட்டி - பொன்னாலியன்றதொரு கோலினது கூர்நுனியால் கோடுகள் வரைந்து காட்டி, பேர்ந்தும் ஒருகால் விரைபெருக்கி மெழுகிட்டான் - மீண்டும் ஒருமுறை மணப்பொருள் கூட்டிய சாந்தாலே அவ்வரைந்து காட்டிய இடத்தை மெழுகும்படி செய்தான், (எ - று.) ஆரிடம் - இருடி வாசகம்; வைதிகமுறை. முன்னர்ச் சாந்தான் மெழுகிட்ட நிலத்தை, மறையோதி ஆரிடமறிந்த அந்தணன், சலாகையாலே கீறி மீண்டும் விரைபெருக்கி மெழுகுவித்தான் என்க. சலாகையால் கீறியது, மணவேள்வி நிகழ்தற்குரிய இடத்தை வரைந்து கொள்ளற் கென்க. |