(இ - ள்.) இடிபடும் முரசில் சாற்றி - இடியைப் போன்று முழங்குகின்ற முரசறைந்து முன்னர் அறிவித்து, ஏற்பவர் - இரவலர்களுடைய, ஆசைதீர - அவாக்கெடும் அளவிற்றாய், பொன்னொடு - பொற்றிரளுடனே, சுடர்விடு மணியின் மாரி சொரிய - ஒளிவிடுகின்ற மணியை மழைபோன்று வழங்குக என்று, ஏவி - அதற்குரியாரை ஏவிவிட்டுப் பின்னர், கன்னியோடு - சுயம்பிரபையோடே, கடிபடு நெடிய மாடம் - காவலமைந்த நீண்ட மேனிலை மாடத்தின் கண்ணே, ஏறினான் - ஏறாநின்றான், (அவன் யாரெனில்) முடிவு கொள் உலகம் எய்தும் - வினைமுடிவின்கண் எய்தற் பாலதாய வீட்டுலகத்தை எய்திய, இன்ப மாமூர்த்தி ஒத்தான் - இன்பவடிவத்தையுடைய பெருமைமிக்க அருக பரமேட்டியையே ஒத்தவனாகிய திவிட்டன் என்பான், (எ - று.) கேவலஞானம் என்னும் மடந்தையோடு வீட்டிற்புகும் உயிரை, இன்பமா மூர்த்தி என்றார் எனினும் ஆம். |