திவிட்டன் சுயம்பிரபையுடன் பள்ளியறை எய்துதல்

1109.

கழுமிய காக துண்டங் கமழ்தொறுங் காள மேகம்
குழுமிய தனைய மாடக் குவட்டிடை யமளி சேர்வார்
விழுமலர்ப் 1பிணையன் னாளும் விடலையு மேரு நெற்றிச்
செழுமணிச் சிலைசென் றேறுந் தெய்வமா மிதுன மொத்தார்.

     (இ - ள்.) கழுமிய - செறிந்த, காகதுண்டம் - அகிற்புகை, கமழ் தொறும் -
மணமுடைத்தாய்ச்சூழுந்தொறும், காளமேகம் குழுமியதனைய மாடக் குவட்டிடை - கரிய
மேகங்கள் கூடியதைப் போன்ற மேனிலை மாடத்தின் உச்சியின்கண் அமைந்த அமளி
சேர்வார் - அணையிடத்தே எய்துபவர்களாகிய, விழுமலர்ப் பிணையன்னாளும் - சிறந்த
மலர்மாலையையுடைய மான் பிணை போன்ற சுயம்பிரபையும், விடலையும் திவிட்டநம்பியும்,
நேருநெற்றி (செழுமணிச்சிலை சென்று ஏறும் - மேருமலையுச்சியிலுள்ள செழிப்புடைய
மணிகள் குவட்டிலே ஏறுதலையுடைய, தெய்வ மாமிதுனம் ஒத்தார் - மிதுன தேவர்களை
ஒத்தனர், (எ - று.)

     தெய்வ மிதுனம் - ஆணும் பெண்ணுமாய் இணைபிரியாதிருக்கும் ஒருவகைத் தேவர்.
அகிற்புகை சூழ்தலாலே முகில் சூழும் மலையை ஒக்குமொரு மேனிலைமாடத்தே ஏறுகின்ற
நங்கை நம்பியர், மேருவிலே ஏறும் மிதுனதேவரை ஒத்தார், என்க. விஞ்சையர்
மிதுனத்தேவர் என்றார் முன்னும் (150).

( 283 )