திவிட்டன் நங்கையின் நலம் பாராட்டல்

1115.

செங்குவளை நாறுந் திருமேனி செவ்வாயும்
அங்குவளை யீரிதழு மாம்பலுமே நாறுமால்
இங்கிவளை முன்படைத்த தேவனென் னின்னுயிரைப்
பைங்குவளை 3மாலையாட் காளாய்ப் படைத்தானே.

         (இ - ள்.) திருமேனி - இவள் திருமேனியோவெனில், செங்குவளை நாறும் -
செங்கழுநீர் மலரின் நறுமணம் கமழ்வதொன்றாயிருக்கும், செவ்வாயும் ஈர் இதழும் -
செவ்விய வாயும் இரண்டாகிய அதரங்களுமோவெனில், அக்குவளை ஆம்பலும் நாறும் -
அழகிய நீலோற்பல மலரின் நறுமணத்தையும் ஆம்பல் மலரின் நறுமணத்தையும் தம்பாற்
கமழப்பெறுவனவா யிருக்கும், இங்கு இவளை - இவ்விடத்தாளாகிய இச்சுயம்பிரபை
நல்லாளை, முன் படைத்த தேவன் - முன்னர் இத்தகையளாய்ப் படைத்த
இறைவனோவெனில், என் இன்னுயிரை - என் ஆருயிரை, பைங்குவளை மாலையாட்கு -
பசிய குவளைமலர் மாலையை அணிந்துள்ள இவட்கு, ஆளாய்ப் படைத்தானே -
கணவனாம் மாத்திரையே படைத்தொழிந்தான். ஏ - இரண்டும் ஆலும் அசைகள், (எ - று.)

இவள் மேனி குவளை நாறும், செவ்வாயும் இதழும் ஆம்பனாறும், இங்ஙனம் இவளைப்
படைத்தான், என்னை இவட்குக் கணவனாந்துணையே படைத்தான் என்றான் என்க. என்றது
என் மேனி முதலியன இவட்கேற்ப இயற்கை மணமுடையனவல்ல என்றவாறு.

( 289 )