அச்சுவகண்டன் நம்மிசைப்
போர்க்குவரக் கருதுகின்றான் எனல்

1133. விரைசெல லிவுளித் தேரோய் விஞ்சைய ருலக மாளும்
அரைசர்க டிகிரி 1வேந்த னச்சுவ கண்ட னோடும்
திரைசெல வுரறி ஞாலந் 2தின்னிய கடல்க ளேழுங்
கரைசெல வருவ போனம் மேல்வரக் கருது கின்றார்.

     (இ - ள்.) விரைசெலல் இவுளித்தேரோய் - விரைந்த செலவினையுடைய புரவிபூண்ட
தேரையுடைய வேந்தனே, விஞ்சையர் உலகம் ஆளும் அரைசர்கள் - விச்சாதரர்
உலகத்தை ஆளாநின்ற அரசர்கள் பலரும், திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும் -
ஆழியேந்திய வேந்தனாகிய அச்சுவ கண்டனுடனே, கடல்கள் ஏழும் - ஏழு கடலும்
ஒருங்கே திரண்டு, திரைசெல வுரறி - அலைகள் விரைந்து செல்லுமாறு முழங்கி, ஞாலம்
தின்னிய - உலகத்தை விழுங்கும் பொருட்டு, கரைசெல வருவபோல் - கரையின்மேல் படர
வருவதைப் போன்று, நம்மேல்வரக் கருதுகின்றார் - நம்மீது போர் செய்ய வருதலை
எண்ணுகின்றனர், (எ - று.)

     அரசே! விச்சாதர வேந்தர் பலர், அச்சுவகண்டனோடு, ஊழிக் காலத்துக்
கடல்போன்ற படையோடே, நம்மேற் போர் ஆற்றலுக்கு வரக் கருதியுள்ளார் என்றான்,
என்க.

( 3 )