(இ - ள்.) சொரி கதிர் வயிரப் பைம்பூண் அரசர்கள் பலரும் சூழ - வீசுகின்ற சுடரையுடைய வயிரத்தாலாய பசிய அணிகலன் அணிந்த பல மன்னர்களும் சூழ, எரிகதிர் ஆழியாள்வான் - சுடர்வீசும் ஆழிப்படையை ஆளுகின்ற அச்சுவகண்டன், இங்கு இனிதின் இருந்தபோழ்தில் - இவ்விடத்தே இனிதாகக் கொலுவீற்றிருந்ததோர் அமையத்தே, அரியது கேட்க என்ன - அரசர் பெருமான் கேட்டற்கரிய செய்தி ஒன்றை இப்போது யான் கூறக் கேட்டருள்க என்று கூறத் தொடங்கி, அரிகேது என்பான் - அரிகேது என்பவன், பட்டது பேசினான் - திவிட்டன் சிங்கத்தை வாய்பிளந்த செய்தியைக் கூறலானான், ஆங்கு - அவ்விடத்தே, பெரியதோர் வியப்புச் சென்றது - அவ்வவையில் மிகப் பெரியதொரு வியப்பு உண்டாகியது,(எ - று.) அரியது கேட்க என்ன அரிகேது பேசினான்; அங்கு அவையில் வியப்புச் சென்றது என்க. |