1140. விஞ்சைய ரதனைக் கண்டு மெய்பொதி ரெறிந்து விம்ம
வெஞ்சினங் கனன்று மீட்டும் விஞ்சைய யவனை நோக்கி
வஞ்சனை மனத்த ராய மனிச 1ரை வலிய ரென்பாய்
அஞ்சினை பெரிது மேடா வென்றன 2னசனி யொப்பான்.
     (இ - ள்.) விஞ்சையர் அதனைக் கண்டு - அங்குள்ள விச்சாதரர்கள் அச்சினச்
செயலைக்கண்டு, மெய் பொதிர் எறிந்து விம்ம - உடல் நடுங்கி அச்சத்தாலே மனம்
விம்மாநிற்ப, விஞ்சையன் மீட்டும் வெஞ்சினம் கனன்று - அச்சுவகண்டன் மீளவும்
வெகுளியால் மனம்கனன்று, அவனை நோக்கி - அவ்வரிகேது என்பானைப் பார்த்து,
அசனி ஒப்பான் - இடியேற்றை ஒத்து முழங்குவானாய் ஏடா - அடே அரிகேது!,
அஞ்சினை பெரிதும் - நீ மனிசரைப் பெரிதும் அஞ்சிவிட்டாய் போலும், வஞ்சனை
மனத்தராய மனிசரை வலியர் என்பாய் என்றான் - ஆதலானன்றோ, வஞ்சனை
மனமுடையரான எளிய மானிடரை மிக்க வலிமையுடையோர் என்று புகழாநின்றனை, என்று
கூறினான், (எ - று.)

     பின்னர், அச்சுவகண்டன் அரிகேதுவை விளித்து, ஏடா! நீ மனிசரை மிக அஞ்சினை!
ஆகலானன்றே “மானிடர் வலியரென்றாய்Óஎன்றான், என்க. இச்செயலை அரியது என்று
அரிகேது கூறலின் அச்சொல்லின் கருத்தாகிய மனிதர் வலியுடையர் - திவிட்டன்
வலிமையுடையன் - என்பதை அச்சுவகண்டன் நெஞ்சிற்கொண்டு இவ்வாறு கூறுகின்றான்
என்பது கருத்து.

( 10 )