கனக சித்திரன் கெழுவேம் எனல்

1170. ஆதலா லெங்க ளாலங் காவதொன் றில்லை யாயிற்
போதுலா மலங்கன் மார்ப பொருவது பொருந்திற் 1றென்னுங்
காதலான் கனக சித்திரன் கட்டுரை யதனைக் கேட்டே
கோதிலா மாரி பெய்த கோடையங் குன்ற மொத்தான்.

     (இ - ள்.) போது உலாம் அலங்கல் மார்ப - மலர்கள் பொருந்திய மாலையையுடைய
வேந்தே!, ஆதலால் - அவ்வாறாதலால், ஆயில் - ஆராயுமிடத்தே, எங்களால் ஆவது -
எம்மனோரால் ஆகற்பாலது, ஒன்று இல்லை - பிறிதொன்றுமில்லை, பொருவது
பொருந்திற்று - போர்செய்தலே இப்பொழுது தக்கதாயிற்று, என்னும் - என்று கூறிய,
காதலான் கனகசித்திரன் - மகனாகிய கனகசித்திரன் என்பானுடைய, கட்டுரையதனைக்
கேட்டே - பொருன் பொருந்திய மொழிகளைக் கேட்டு, கோது இலா மாரி பெய்த -
குற்றமில்லாத மழைபொழியப்பட்ட, கோடை அம்குன்றம் ஒத்தான் - கோடைக்காலத்து
மலையை ஒத்தவன் ஆனான், (எ - று.)

ஞாயிற்றின் வெப்பத்தாலே கொதித்து நின்ற குன்றம், பெரிய மழை பெய்தலாலே
குளிர்ந்தாற் போன்று, திவிட்டன் பகையாலே கொதித்த அச்சுவ கண்டன், கனகசித்திரன்
சொன்மாரியாலே சினந்தணிந்து மனங்குளிர்ந்தான்; என்பதாம்.

( 40 )