துருமகாந்தன் பொழிலையடைதல்

118. எரிபடு 1விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி 2தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான்.
 
     (இ - ள்.) எரிபடுவிரிசுடர் - நெருப்பைப்போல ஒளியை விடுகின்ற; இலங்கு
பூணினான் - விளங்குகின்ற அணிகலன்களையணிந்த பயாபதி மன்னனின்;
திருவடிதொழுதுசெல் - அழகிய அடிகளைப் பணிந்து செல்கின்ற; துருமகாந்தனும் -
துருமகாந்தன் என்பவனும்; வரிபடு மதுகரம் முரல - கோடுகள் பொருந்திய வண்டுகள்
ஒலிக்கும்படி; வார்சினை - நீண்ட கிளைகளிலே; சொரிபடு - சொரிகின்ற; மது - தேன்
பொருந்திய; மலர்ச்சோலை நண்ணினான் - மலர்கள் நிறைந்த புட்பமாகரண்டம் என்னும்
பொழிலை யடைந்தான். (எ - று.)

     அரசன் துருமகாந்தன் என்பவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு
அந்தப்புரத்தையடைந்தான். அரசன் கட்டளையைப் பெற்ற துருமகாந்தன் அரசனைத்
தொழுது காவலை மேற்கொண்டு பூம்பொழிலை யடைந்தான்.
 

 ( 49 )