இதுவுமது

1184. அத்திர மாதி யாக வோதிய நான்கு விஞ்சை
தொத்தெரி சுடரு மொள்வா ளென விரண் டாகு முன்னாம்
வைத்தவுட் கடைய தேனை யொழிந்தது பரம மாயை
இத்திறத் தினைய வென்றா னெரிமணி யிமைக்கும் பூணான்.
     (இ - ள்.) எரிமணி இமைக்கும் பூணான் - சுடர்கின்ற மணிகள் விளங்கும் அணிகலன்
அணிந்த சிறீசேனன், யாம் வைத்த - யாம் முறைப்படுத்திவைத்த, முன் உட்கடையது ஏனை
ஒழிந்தது - முன்னிறுத்தியதாகிய மானிடம் இடையில் நிறுத்தியதாகிய தெய்வம் இவற்றில்
எஞ்சி நின்றதாகிய கலப்பு என்னும் இவற்றிற்கு நிரலே, அத்திரம் ஆதியாக ஓதிய நான்கும்
- அம்புகளை உள்ளிட்ட எய்வன எறிவன வெட்டுவன குத்துவன எனக் கூறப்பட்ட நான்கு
கூற்றுப் படைக்கலமும், விஞ்சைதொத்து எரி சுடரும் ஒள்வாள் என இரண்டு -
மாயவித்தையும் கொத்தாக எரிந்துசுடரும் ஒளியுடைய வாள்முதலிய படைக்கலமும் ஆகிய
இருகூற்றுப் படைக்கலமும்; பரமமாயை - மேலான மாய வித்தையாகிய ஒரே
படைக்கலமும், இத்திறத்த இனையஆகும் என்றான் - இத்தகைய இவைகள் உரியன ஆகும் என்றான், ( )
யாம் முன்கூறியவற்றுள் படைக்கலம் மானிடப் படைக்கலம் எய்வன எறிவன வெட்டுவன
குத்துவன என்னும் நான்கு கூற்றுப் படைக்கலனுமாம். தெய்வப் படைக்கலம் மாயவித்தையும்
வாளும் ஆகிய இருவகைப் படைக்கலமுமாம். கலப்புப் படைக்கலம் மாயவித்தை
ஒன்றேயாம் என்றவாறு. யாம் வைத்த முன்உட்கடையது ஏனையொழிந்தது என்பன.
மானுடம் தெய்வம் இருமை என்பனவாம். முன் - முன்வைக்கப்பட்டது; அது மாநுடம்;
உட்கடையது - நடுவே வைக்கப்பட்டது; அது தெய்வம், ஏனை ஒழிந்தது - இறுதியில்
வைக்கப்பட்டது, அது இருமை. இவற்றிற்கு நான்கும் இரண்டும் பரம மாயையும் ஆகும்
என நிரல்நிரலாகப் பொருள் கொள்க. வாள் - ஈண்டு படைக்கலன்கட்குப் பொதுப் பெயர்.

( 54 )