பலரும் பலவாறு கூறல்

1189. விச்சையின் செருக்கி னாலும் வீங்குதோட் டருக்கி னாலுங்
கச்சையங் களிற்றோ டேனைக் கவனமா வலத்தி னாலு
மச்சுவக் கிரீவ னாதி யரசர்க ளழன்று வெம்போர்
நச்சிமேல் வருப வாயி னன்றது போல்வ துண்டோ.
     இது முதல் 7 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) அச்சுவக்கிரீவன் ஆதி அரசர்கள் - அச்சுவகண்டன் முதலிய
உத்தரசேடிக்கண் உள்ள மன்னர்கள், விச்சையின் செருக்கினாலும், தாம் பயின்றுள்ள
வித்தை மிகுதியால் உண்டாகிய மதத்தாலும், வீங்குதோள் தருக்கினாலும் - தம் பருத்த
தோள்வலிமையாலாகிய மதத்தாலும், கச்சை அங்களிற்றோடு ஏனைக் கவனமா
வலத்தினாலும் - கச்சையென்னும் கயிற்றையுடைய யானைப் படையினோடே, மற்றைய
குதிரைப் படைப் பெருக்கத்தின் வலிமையுண்மையாலும், அழன்று - நம்மைச் சினந்து,
வெம்போர் நச்சி - நம்மொடு வெவ்விய போர் ஆற்றுதலை விழைந்து, மேல் வருப ஆயில்
- போர்மேற்கொண்டு வருவாராயின், அதுபோல்வது நன்று உண்டோ - நமக்கு அதைப்
போன்ற நன்மை வேறியாதுளது? (எ - று.)

அச்சுவகண்டன் முதலிய அரசர்கள், தம் செருக்காலும், படை வலத்தாலும், தருக்குற்றுச்
சினந்து, நம்மேல் போர் ஆற்ற வருவாராயின், அது நமக்கு மிக நன்மையே ஆம்; என்றார்
 என்க. அவர்பால் நாமே வலிந்து போர்க்குப் போதல் வேண்டும்; அங்ஙனம் யாம்
போகாமலிருப்ப அவரே வருவராயின், அது நன்மையே என்றபடி.

( 59 )