(இ - ள்.) பொன்அவிர் திகிரி ஆளும் புரவலன் உரைப்ப வந்த - பொன்னொளி விரியும் ஆழிப்படையையுடைய அச்சுவகண்டன் என்னும் மன்னவன் ஏவுதலாலே வந்துள்ள, மன்னவன் தமரம்யாம் - அம்மன்னவனைச் சார்ந்த தூதர்கள் யாம், மன்னீர் - அரசர்களே, வாய்மொழிகேண்மின் - எம்முடைய மொழியைக் கேளுங்கள், கன்னியைத் தருதிரோ - சுயம்பிரபையை எம்மன்னனுக்குக் காணிக்கைப் பொருளாகத் தருவீர்களோ? அல்லது, அக்கன்னியை மகிழ்ந்த காளை - அச்சுயம்பிர பையை மணந்துகொண்ட திவிட்டனுடைய, இன்னுயிர் தருதிரோ - இனிய உயிரைத் தருவீர்களோ?, இவ்விரண்டில் ஒன்று உரைமின் என்றார் - இவ்விரண்டில் உங்களுக்கு விருப்பமானதொன்றைத் துணிந்து கூறுங்கோள் என்று கூறினர், (எ - று.)யாங்கள் அச்சுவகண்டன் தூதர்கள்; அரசர்களே! எம்மொழி கேண்மின்; கன்னியைத் தருதிரோ! அன்றேல் காளை இன்னுயிர் தருதிரோ! இரண்டில் ஒன்று துணிந்துரைமின் என்றார், என்க. |