அச்சுவகண்டன் படை சுரமைநாட்டினை எய்துதல்

1230. பொன்றவழ் தேர்கலி மாவொடு 1போதக
மென்றிவை யெங்கு மிடம்2பிறி தின்றி
நின்றன நின்றது வாட்படை யப்படை
3சென்று பெருந்திசை யார்த்தனர் சேர்ந்தார்.
     (இ - ள்.) பொன் தவழ் தேர் கலிமாவொடு போதகம் - பொன்னிறம் தவழ்கின்ற
தேர்களும் புரவிகளோடு யானைகளும், என்று இவை எங்கும் இடம் பிறிது இன்றி நின்றன
- என்று கூறப்பட்ட இம்மூவகைப் படைகளும் தாந்தாம் நின்றவிடமன்றி இயங்குதற்குப்
பிறிதிடம் எவ்விடத்தும் பெறாமையால் நின்றபடியே நின்றன, வாள்படை நின்றது -
வாளேந்திய காலாட்படை முன் அணியில் நின்றது, அப்படை - அக்காலாட்படை மறவர்,
சென்று பெருந்திசை ஆர்த்தனர் சேர்ந்தார் - போய்ப் பெரிய திசைகள் அதிர
ஆரவாரித்துச் சுரமை நாட்டை எய்தினர், (எ - று.)

தேரும் யானையும் குதிரையும் நெருங்கி இயங்க இடம் பெறாமல் நின்றன; முன்னின்ற
காலாட் படை. சுரமைநாட்டை எய்திற்று.

( 100 )