வில் அறுபட்டமை | 1239. | வடிநூ னுதிகவ் வியவா ளையொடும் விடுமீ னெறிதூண் டில்விசைத் தனபோ லடுநா ணிடையே றியவம் பினொடு நெடுநா ணறவிற் கணிமிர்ந் தனவே. | (இ - ள்.) வடிநூல் நுதி - தமது வடித்தநூலின் நுனியை, கவ்விய வாளையொடும் - பற்றிய வாளைமீனோடு, விடும் - விட்டுவிட்ட, விசைத்தன - தெறிக்கப்பட்டனவாகிய, மீன்எறி தூண்டில்போல் - மீன்படுக்குங் கருவியாகிய தூண்டிலின் கோல்கள் நிமிர்ந்தாற்போல, விற்கள் - விற்படைகள், அடும் நாண் இடையேறிய அம்பினொடு - கொல்லுந்தொழிலையுடைய தம் நாண்களின் இடையே ஏற்றப்பட்ட கணைகளோடே, நெடுநாண் அற - அந்நெடிய நாண்கள் அறுபடாநிற்ப, நிமிர்ந்தன - நிமிரா நின்றன, (எ -று.) தூண்டில் விசைக்கும்பொழுது தனது நூலைப்பற்றிய வாளையோடு அந்நூல் நுனி அற்று விட்டதாக எப்படி நிமிரும். அப்படி வில் ஏற்றிய நாணற்றபொழுது நிமிர்ந்தது என்பது இதன் கருத்து. இக்கருத்திற்கேற்பக் கொண்டுகூட்டிப் பொருள் காண்க. இருப்பு முள்ளை விழுங்கிய வாளைமீனோடு தூண்டில் விசைத்த பொழுது தூண்டிலின் நுனி மீனோடு விடுபட்டதாக அப்பொழுது அத் தூண்டிற் கழி நிமிர்வதுபோல விற்கள் நாணற்றுழி நிமிர்ந்தன என்க. | ( 109 ) | | |
|
|