(இ - ள்.) தேன் அகத்து உறையும் - தேனானது உள்ளே பொருந்திய; செழும் - செழிப்புமிக்க; கானக சந்தன தழையின் - காட்டிடத்துத்தோன்றிய சந்தனக்குழையினாலாய; கமழ் சேக்கைமேல் - மணம் வெளிப்படும் படுக்கையின்மேல்; ஊனகத்தவர் போகம் உவந்து - மானிடர் நுகரும் நுகர்ச்சியைத் தாமும் நுகரவிரும்பி; வானகத்தவர் - தேவர்கள், வைகல் வைகுவர் - அம்மலையின்மேல் நாடோறும் வந்து தங்குவர். (எ - று.) எல்லாவகைச் சிறப்புக்களோடும் விண்ணுலகத்தில் இன்பம் நுகரும் வானகத்தவர், மண்ணகத்திற்கிழிந்து சந்தனத்தழையின் படுக்கைமேல் தங்கி மெய்யுறு புணர்ச்சியின்பந்துய்க்கும் மண்ணகத்தவரைப் போன்று தாமும் இன்பந்துய்க்கக் கருதி அங்குவந்து தங்குவர் என்பதாம். தேவர்கட்கு இத்தகைய நுகர்ச்சி யின்மையின் அதனை அவாவினர் என்க. ஊனகத்தவர் - ஊனுடல் படைத்த மனிதர். வானவர் ஊனிலா வுடம்பினர் என்பது இதனாற் போதரும். |