அச்சுவக்கிரீவன் மேற்செலவு

1259. இருந்தினி யென்னையிங் கெழுக வென்றுபோய்ப்
பெருந்தகை யருங்கலப் பெயர்கொள் குன்றின்மேற்
பரந்தன படையொடு பாடி 1விட்டனன்
கருந்திரண் முகில்புரை காள மேனியான்.
     (இ - ள்.) ஈங்கு இனி இருந்து என்னை - இவ்விடத்தே யாம் இனி வாளா
விருத்தலால் பயன் யாது, எழுக என்று போய் - எல்லீரும் எழுங்கோள் என்று
கூறிப்போய், பெருந்தகை அருங்கலப் பெயர்கொள் குன்றின்மேல் - மிக்க பெருமையுடைய
அருங்கலம் என்னும் பெயர் கொண்டதொரு மலையின் மேலே, பரந்தன படையொடு பாடி
விட்டனன் - விரிந்த படையுடனே பாடி வீடமைத்துத் தங்கினான், கருந்திரள் முகில்புரை
காள மேனியான் - கரியதாய்த் திரண்டுள்ள மேகத்தை ஒத்த கருமை நிறமுடைய
அச்சுவகண்டன், (எ - று.)

இனி இங்கிருத்தலாற் பயனின்று; என் படை எழுக! என்று படையோடே போந்து,
‘அருங்கலம்’ என்னும் மலையிலே, அச்சுவகண்டன் இறங்கினன் என்க.
இம்மலை சீபுராணத்துள் ‘இரதாவர்த்தம்’ என்று கூறப்பட்டுளது.

( 129 )