பாறையில் மகரந்தப்பொடி

126. மஞ்சு தோய்வரை மைந்தரொ டாடிய
1அஞ்சி லோதிய 2ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று 3தை வுற்றதே.
 

     (இ - ள்.) மஞ்சுதோய்வரை - முகில்கள் படிந்த அம்மலையின் கண்; மைந்தரொடு
ஆடிய - ஆடவர்களொடு இன்பவிளையாடல் புரிந்த; அஞ்சில் ஓதியர் ஆர் அளகப்பொடி
- அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர் அக்கூந்தலில் அப்பிய அரிய நறுமணச்
சுண்ணம்; பஞ்சு அராகம் பதித்த பளிக்கறை - அவர்கள் நடந்தமையாலே அவர்களுடைய
அடியிற் பூசப்பட்ட செம்பஞ்சுக்குழம்பின் நிறம் பொறிக்கப்பட்ட பளிங்குப்பாறையாகிய,
துஞ்சு பாறைகள்மேல் துதைவுற்றது - அவர்கள் துயில்தற்கிடமான அப்பாறைகளின்மேற்
படிந்தது. (எ - று.)

     ஓதியர் அளகப்பொடி அவரியங்கியபொழுது அவருடைய பஞ்சராகம்
பதிக்கப்பட்டிருந்த பளிக்கறையாகிய அவர்கள் துயின்ற பாறைகளின் மேற் படிந்தது என்க.

     ஆர் - அரிய. அளகப்பொடி - கூந்தலிலப்பும் நறுமணப்பொடி. இதனை, “அளகத்
தப்பிய செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல்“ எனவரும் பெருங்கதையானும்
(33 : 19 - 20) உணர்க. பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. அராகம் - நிறம். பளிக்கறையாகிய
பாறை; துஞ்சுபாறை, எனத் தனித்தனி கூட்டுக. துதைதல் - படிதல்.
 

 ( 8 )