விச்சாதரர் படை ஒருங்கெழுந்து போர் செய்தல் | 1266. | நஞ்சினை நஞ்சுசென் றெரிக்க லுற்றபோல் விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி மேல்வர வஞ்சமின் மணியொளி வண்ணன் றானையு மெஞ்சலின் றெழுந்தெதி ரூன்றி யேற்றதே. | (இ - ள்.) விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி - விச்சாதரர்கள் வெவ்விய வெகுளியை வளர்த்துக்கொண்டு, நஞ்சினை நஞ்சு சென்று எரிக்கலுற்றபோல் - ஒரு நஞ்சினை மற்றொரு நஞ்சு பகைத்துச் சுட்டொழிக்கச் செல்வதுபோல, மேல்வர - போர் மேற்கொண்டு வராநிற்ப, வஞ்சம் இல் மணிஒளி வண்ணன் தானையும் - வஞ்சகமில்லாத திவிட்ட நம்பியினுடைய படையும், எஞ்சல் இன்று எழுந்து - குறைவின்றி எழுந்து, எதிர் ஊன்றி ஏற்றதே - விச்சாதரர் படைக்கு எதிர் சென்று தடுத்துப் போர் செய்யத் தொடங்கியது, ஏ : அசை, (எ - று.) விச்சாதரர் சினமிக்கு ஒரு நஞ்சினை மற்றொரு நஞ்சு பகைத்து வருமாப்போல வர, நம்பிபடையும் சென்று எதிர்த்த தென்க. | ( 136 ) | | |
|
|