1279. | அச்சமுடை யாரகல்க வாற்றுபவ ரேற்க வெச்சமில் குடித்தலைவர் போகவென வெங்குங் கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார் வெச்சென விழித்துவிறல் வீரர்திரி கின்றார். | (இ - ள்.) அச்சம் உடையார் அகல்க - போர்த் தொழிலை அஞ்சும் ஆண்மையில்லோர் அகல்வீராக, ஆற்றுபவர் ஏற்க - எம்மொடு அஞ்சாது நின்று போராற்றவல்லுநர் போர் ஏற்று ஆற்றுவீராக, எச்சமில் குடித் தலைவர் போக - பொன்போற் புதல்வரைப் பெறாதீரும் போகக் கடவீர், என - என்று கூறி, எங்கும் - அக்களம் எங்கும், கச்சையர் - கச்சணிந்தவரும், கருங்கழலர் - கரிய வீரக்கழல் கட்டியவரும், காலனையும் நோனார் - கூற்றுடன்று மேல்வரினும் பொறாது சினக்கும் மறத்தன்மையுடையாரும் ஆகிய, விறல்வீரர் - ஆற்றல்மிக்க மறவர்கள், வெச்சென விழித்து - வெய்தின் விழித்து, திரிகின்றார் - திரியலானார்கள், (எ - று.) வெச்சென விழித்தல் - கண்ணோட்டமின்றிச் சினந்து அஞ்சும்படி பார்த்தல். போர் செய்தற்கு அஞ்சுபவர் ஓடிவிடுக: அஞ்சாதவர் மட்டுமே நின்று எம்மோடுபோராற்றுக : புதல்வர்ப் பேறில்லாதவரும் போக, என்றுகூறி, மறலியையும் அஞ்சாத மறவர்கள், கண்டோர் துணுக்குற்று அஞ்சும்படி விழித்துப் போர்க்கள மெங்கும் திரிவாராயினர் என்க. | ( 149 ) | | |
|
|