வியாக்கிரரதன் அரிசேனனை எதிர்த்தல் | 1284. | அங்கவன் மொழிந்தமொழி கேட்டலு மருக்கன் வெங்கணை தெரிந்தது விலக்கிவிறல் வெய்யோ யிங்கிவ னினக்குநிக ரோவென விசைத்தே பொங்குபுலித் தேர்ப்பெயரன் போந்துபொர லுற்றான். | (இ - ள்.) அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் - அவ்விடத்தில் அந்த அரிசேனன் என்பவன் சொன்ன சொற்களைக் கேட்ட அளவில், அருக்கன் வெங்கணை தெரிந்தது - அருக்கி கீர்த்தியானவன் அவனை எதிர்த்துப் போர் செய்வதற்காகச் சென்று கொடிய கணைகளை ஆராய்ந்து எடுத்துச் செலுத்தத் தொடங்கியதை, பொங்கு - மிகுந்த சினத்தையடைகிற, புலித்தேர்ப்பெயரன் - வியாக்கிரரதன் என்பவன், விலக்கி - தடுத்து, விறல் வெய்யோய் - வெற்றியை உடைய வீரனே!; இங்கு நினக்கு இவன் நிகரோ என இசைத்து - இவ்விடத்திலே நின்னோடு போர் செய்வதற்கு இவன் ஒப்பாவனோ என்று கூறி, போந்து - தானே போர் செய்வதற்கு வந்து, பொரல்உற்றான் - போர் செய்யத் தொடங்கினான், (எ - று.) இப்பாட்டின் மூன்றாவது அடி; “இங்கிவ னினக்குநிக ராகலுறுமென்றே“ என்று சில படிகளில் காணப்பெறுகிறது. அருக்ககீர்த்தி இளவரசனாதலின் வியாக்கிரரதன் இவ்வாறு கூறித் தடுக்கலானான். வியாக்கிரரதன் அருக்ககீர்த்தியின் படைத்தலைவன்; அரிசேனன் அச்சுவகண்டனுடைய தோழன். | ( 154 ) | | |
|
|