தூமகேதனனின் ஆரவார வீரமொழி | 1318. | மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ மறிகட லறவிறைத் திடுகோ வுலைமடுத் துலகம் பதலையா வூழித் தீமடுத் துயிர்களட் டுண்கோ சிலையிடத் துடையார் கணைவலத் துடையார் சிலர்நின்று செய்வதீங் கென்னோ நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே னேடுமின் சென்றென நின்றான். | (இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத் தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ! அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப் போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி, உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச் சமைத்து உண்பேனோ, (என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,) சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் - அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?, நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர் சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.) அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச் செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல் தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின் அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க. | ( 188 ) | | |
|
|