(இ - ள்.) பூகராசி - கமுகமரக் கூட்டம்; வேய் - அழகிதாகச் செய்கின்ற; நிழல் - ஒளியினால்; நிலா இலங்கு - திங்களொளி போல் விளங்குகின்ற; வெள்ளி - வெள்ளிய; விம்மு பாளைவாய் - பருத்த பாளையினிடத்தே; பாய்நிழல் - பரவுகின்ற ஒளியைச் செய்கின்ற; பசுங்கதிர் - பசிய நிறமான ஒளியையுடைய; பரூஉ மணி - பெரிய மணிகளைப்போன்ற; குலைகுலாய் - குலைகள் விளங்கப்பெற்று; சேய்நிழல் - நெடுந்தொலையளவும் ஒளி வீசுகின்ற; செழும்பொனால் - உயர்ந்த பொன்னினால்; திரண்ட செம்பழத்தவாய் - திரண்டமைந்த சிவந்த பழங்களையுடையனவாய்; நிழல் போய் பொலிந்து வீழ்வ போன்ற - நிழல் நெடுந்தொலை சென்று பொருந்திப் பொலிதலானே கீழேவீழ்வன போலுள்ளன. (எ - று.) பூகராசி. வெள்ளிநிறமுடைய பாளையிலே பச்சை மணி போன்ற காய்களையுடைய குலைபொருந்திச் செம்பொன் மயமான பழங்களையுடையன; அவற்றின்நிழல் நெடுந்தொலையளவும் தரையிற் படிந்திருத்தல் அம்மரங்கள் சாய்ந்து கிடந்தாற்போல் உள்ளதென்பது ஈற்றடியின் கருத்து. நிழன்னிலா - னகரமெய் விரித்தல் விகாரம். பாளைவாய். வாய் - ஏழனுருபு. |