தேவசேனனின் மறுமொழி

1330. மலைமேலு நின்னை மதியாது வாழ்வன்
     மனிதர்க்கு வந்து படையாய்
நிலமேலு நின்று பொருவான் புகுந்த
     நிலைகண்டு நின்று மிஙனே
சலமே யுரைத்தி 1யிதுவோவு னாண்மை
     தழல்வேக வென்ன வெதிரே
உலமேசு தோளி னொளிவேலி னோடு
     மொருவா னெதிர்ந்து பொருவான்.
     (இ - ள்.) மலைமேலும் நின்னை மதியாது வாழ்வன் - யான் வாழும்
மலையிடத்தேயும் உன்னை ஒரு பொருளாக மதியாமலே தான் வாழாநின்றேன், மனிதர்க்கு
வந்து படையாய் - மேலும் எம்முறவினராகிய மனிதர்க்குத் துணைப்படையாய் வந்து, நில
மேலும் நின்று பொருவான் - இப்பூமியிடத்தேயும் உன்னை மதியாது எதிர்த்து நின்று போர்
செய்யவும், புகுந்த நிலைகண்டு நின்றும் - ஆண்மையுடனே எதிர்வந்த என்னுடைய
தன்மையைக் கண்கூடாகக் கண்டு வைத்தும், இஙனே - இவ்வாறு உரைத்தி - கூறாநின்றாய்,
சலமே - இது வஞ்சனையோ, இதுவோ உன் ஆண்மை - இவ்வாறு பொருளின்றிப் பேசுதல்
மாத்திரையோ உனக்கு ஆண்மையாவது, தழல்வேக - அழல்வேகனே ! என்று பழித்து,
உலம் ஏசுதோளின் - உலக்கல்லைப்பழித்த திரண்ட தோளின் மிசைச் சார்த்திய,
ஒளிவேலினோடும் - சுடர் வேலோடும், ஒருவான் - அஞ்சி அகலாதவனாய், எதிரே
எதிர்ந்து பொருவான் - அவன் எதிரே சென்று போர் ஆற்றத் தலைப்பட்டான், (எ-று.)
மதியாது மலைமேல் வாழ்தலும் நிலமேல் எதிர்தலும் சலமன்றாகவும், சலம் என்றனை. நீ
உண்மை அறியாத அறிவிலி என்றிகழ்ந்தபடி. இங்ஙனே, இடை குறைந்து இஙனே என
நின்றது.

( 200 )