இன்ப துன்பம்

136. 2தெய்வ யாறு 3காந்தளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பௌவ முத்த 4வார்மணற்ப றம்பு மௌவன் மண்டபம்
எவ்வ மாடு மின்னபோலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ 5தந்நகர்க்கு மாரனார் செய் கவ்வையே.

     (இ - ள்.) தெய்வயாறு - தெய்வத் தன்மைபொருந்திய ஆறும்; காந்தள் அம் சிலம்பு
- காந்தள் மலர்பூத்த அழகியமலையும்; தேங்கொள் பூம்பொழில் - தேன்கசிந்தொழுகும்
பூக்களால் விளங்கும் பொழில்களும்; பௌவம் முத்த வார்மணல் பறம்பு - கடலினருகே
முத்துப்போன்ற மிகுந்த மணலமைந்த மணற்குன்றும்; மௌவல் மண்டபம் -
முல்லைப்பந்தலும் ஆகிய; இன்னபோல் இடங்கள் - இத்தகைய இடங்கள்; எவ்வமாடும் -
எல்லாப் பக்கங்களினும் உளவாகி; இன்பம் ஆக்கலால் - இன்பத்தை விளைவித்தலால்;
அந்நகர்க்குக் கவ்வை ஆவது - அந்த இரதநூபுர நகரத்திற்குத் துன்பமாவது, மாரனார்
செய் கவ்வையே-காமனார் விளைவிக்கின்ற துன்பமேயாகும்.(எ- று.)

இரத நூபுர நகரத்திற்கு எத்தகைய தொல்லையும் இல்லையென்பதும், அங்கு இன்பமே
கூத்தாடுகின்ற தென்பதும் இச்செய்யுளால் உணர்த்தப் பட்டது. கவ்வை - துன்பம்.
 

( 18 )