இதுவுமது

1384. நெய்யினா னிழன்றுநீர் நின்ற நீளொளி
வெய்யவா ளமரிடை வெருவி யிட்டதங்
கையினாற் கருனையின் கவளங் கொள்ளிய
ஐயன்மார் போந்ததென் றசதி 1யாடினான்.
     (இ - ள்.) நெய்யினால் நிழன்று நீர் நின்ற நீள்ஒளி வெய்ய வாள் அமரிடை -
நெய்பூசுதலாலே விளங்கி மறத்தன்மை நிற்றற்குக் காரணமான தன்மையுடைய நீண்ட
ஒளிக்கதிர்காலும் வெவ்விய வாளால் ஆற்றப்படும் போர்த்தொழிலில், வெருவியிட்ட தம்
கையினால் - அஞ்சித் தம் படைக்கலன்களை எறிந்துவிட்ட தம்முடைய திருக்கைகளாலே,
கருனையின் கவளம் கொள்ளிய - மனைவியர் உவந்தூட்டும் பொரிக்கறியோடு கூடிய
உண்டியை ஏந்தி உண்ணவோ, ஐயன்மார் போந்தது - சிறந்த தலைவர்கள் இங்கு வந்தது,
என்று அசதியாடினான் - என்றுகூறி இகழ்ந்தான், (எ - று.)

     அசதியாடல் - பரிகசித்தல்.

     படைத்தலைமை சான்ற பெரியீர்! பகையஞ்சி வாள் முதலியவற்றை விட்டெறிந்த
இத்திருக் கைகளால், பொரிக்கறிக்கவளம் நுங்காதலிமார் தர அவற்றை ஏந்தி உண்ணவோ
இவ்வாறு நீயிர் ஓடிவருகின்றீர் என்றான் என்க.
ஐயன்மார் என்றது இகழ்ச்சி.

(254)