இதுவுமது
1387. பத்திரக் கடிப்பினன் பைம்பொற் றாரினன்
சித்திர மணித்தொடர் திளைக்குந் தானையன்
கத்திகைக் கண்ணியன் காணும் பாலெலாம்
தொத்திணர்க் குஞ்சியான் காளை தோன்றினான்.
     (இ - ள்.) பத்திரக்கடிப்பினன் - அழகிய குதம்பையை அணிந்தவனாய், பைம்பொன்
தாரினன் - பசிய பொன்மாலை பூண்டவனாய், சித்திரமணித் தொடர் திளைக்கும்
தானையன் - சித்திரத்தொழில் அமைந்த மணிமாலைகள் பொருந்திய
ஆடையணிந்தவனாய், கத்திகைக் கண்ணியன் - கத்திகையாகிய முடிமாலையை
அணிந்தவனாய், தொத்திணர் குஞ்சியான் - கொத்தாகிய பூக்களைச்செருகிய தலைமயிர்க்
கற்றையையுடைய, காளை - கனகசித்திரன், காணும் பாலெலாம் - பார்க்குமிடந்தோறும்,
தோன்றினான் - காணப்பட்டான், (எ - று.)

     பத்திரம் - அழகு; மேன்மையுமாம். கடிப்பு - ஒருவகைக் காதணி. “மங்கலக் கடிப்புச்
சேர்த்தி“ (சிந்தாமணி, கோவிந் - 80) என்னும் சிந்தாமணியானும் உணர்க.

     கடிப்பினனாய்த் தாரினனாய்த் தானையனாய்க் கண்ணியனாய்க் குஞ்சியான் காணும்
பாலெலாம் தோன்றினான் எனக் கூட்டுக. தானை - ஆடை.

(257)