1397. | பெருகிய குருதியுட் பிறங்கு செந்தடி அருகுடை யளற்றினு ளழுந்திப் பாகமே சொரிகதிர்க் கோடக முடிக டோன்றலால் பொருகளம் புற்றெடுக் கின்ற 1போலுமே. | (இ - ள்.) பெருகிய குருதியுள் - பெருக்கெடுத்தோடும் குருதி வெள்ளத்தே, பிறங்கு செந்தடி - விளங்குகின்ற செவ்விய ஊனாகிய, அருகுடை - பக்கத்தே உளதாகிய, அளற்றினுள் - சேற்றிடத்தே, பாகமே அழுந்தி - ஒரு பகுதி மாத்திரையே புதையுண்டு, சொரிகதிர் கோடக முடிகள் தோன்றலால் - பொழிகின்ற ஒளியை உடைய கோடகமாகச் செய்யப்பட்ட முடிகள் காணப்படுதல் உண்மையின், பொருகளம் - அப்போர்க்களமானது, புற்று எடுக்கின்ற போலும் - புற்றுக்களைத் தன்பால் தோற்றுவனபோலத் தோன்றா நிற்கும், (எ - று.) கோடகமுடியின் ஒரு பகுதி புதையுண்டு ஒருபகுதி மேலே தோன்றுதல், புற்றுக்கள் தோன்றுவன போன்று காணப்பட்டன என்பதாம். கோடகமுடி - ஐந்துவகை முடிக்கலன்களுள் ஒன்று. அவையாவன:- தாமமுடி, முகுடமுடி, பதுமமுடி, கோடகமுடி, கிம்புரிமுடி என்பன. இவற்றுள் கோடகமுடி சிகரவடிவிற்று ஆகலின் புற்று உவமையாயிற்று என்க. | (267) | | |
|
|