1400. செருவரை யனையதோண் மன்னர் சேனையுள்
அருவரை புகுமயி லனைய வாயின
கருவரை யனையன 1களிநல் யானையின்
பெருவரை முகம்2புகும் பிண்டி பாலமே.
     (இ - ள்.) செருவரை அனையதோள் மன்னர் - போர்த் தொழிலையுடைய
மலைபோன்ற தோள் பொருந்திய அரசருடைய, சேனையுள் - படைகளினூடே, கருவரை
அனையன களிநல் யானையின் -கரிய மலை போன்ற களிப்புடைய நல்ல யானைகளின்,
பெருவரை முகம்புகும் - பெரிய கோடுகளையுடைய முகத்திலே முழுகுகின்ற, பிண்டிபாலம்
- பிண்டிபாலம் என்னும் கருவிகள், அருவரைபுகும் மயில் அனைய வாயின - ஏறற்கரிய
மலையிடத்தே புகும் மயில்களை ஒத்துத்தோன்றின, (எ - று.)

     யானைகளின் முகங்களிற் பாய்கின்ற பிண்டிபாலம் கரிய மலையிடத்தே புகும்
மயில்களை ஒத்தன என்க.

     பிண்டிபாலம் - தலையிலே மயிற்பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை ஆகலின்
மயிலை உவமை கூறினார். இதனை,

     “பிண்டிபாலத்தை ஏந்தி அருவரை நெற்றிப் பாய்ந்த ஆய்மயிற் றோகைபோலச்
சொரிமதக் களிற்றின் கும்பத்தழுத்தலின்“ எனவரும் சீவகசிந்தாமணியினும் (2269) காண்க.

(270)