1400. | செருவரை யனையதோண் மன்னர் சேனையுள் அருவரை புகுமயி லனைய வாயின கருவரை யனையன 1களிநல் யானையின் பெருவரை முகம்2புகும் பிண்டி பாலமே. | (இ - ள்.) செருவரை அனையதோள் மன்னர் - போர்த் தொழிலையுடைய மலைபோன்ற தோள் பொருந்திய அரசருடைய, சேனையுள் - படைகளினூடே, கருவரை அனையன களிநல் யானையின் -கரிய மலை போன்ற களிப்புடைய நல்ல யானைகளின், பெருவரை முகம்புகும் - பெரிய கோடுகளையுடைய முகத்திலே முழுகுகின்ற, பிண்டிபாலம் - பிண்டிபாலம் என்னும் கருவிகள், அருவரைபுகும் மயில் அனைய வாயின - ஏறற்கரிய மலையிடத்தே புகும் மயில்களை ஒத்துத்தோன்றின, (எ - று.) யானைகளின் முகங்களிற் பாய்கின்ற பிண்டிபாலம் கரிய மலையிடத்தே புகும் மயில்களை ஒத்தன என்க. பிண்டிபாலம் - தலையிலே மயிற்பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை ஆகலின் மயிலை உவமை கூறினார். இதனை, “பிண்டிபாலத்தை ஏந்தி அருவரை நெற்றிப் பாய்ந்த ஆய்மயிற் றோகைபோலச் சொரிமதக் களிற்றின் கும்பத்தழுத்தலின்“ எனவரும் சீவகசிந்தாமணியினும் (2269) காண்க. | (270) | | |
|
|