மணிகண்டன் முதலியோர் மாண்டமை தூதர்
அச்சுவகண்டனுக்குக் கூறல்

1424. தம்பியர் பாடு மக்க ளிறந்ததுந் தனக்குப் பாங்காய்
வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவி னோடிச்
செம்பினை யுருக்கி வெய்தாய்ச் செவிமுதற் சொரிந்த தேபோல்
அம்பொன்செ யாழியானுக் குரைத்தன ரரக்குண் 1கோலார்.
     (இ - ள்.) அம்பொன் செய் ஆழியானுக்கு - அழகிய பொன்னாலியன்ற
உருட்படையுடைய அச்சுவகண்டனுக்கு. அரக்கு உண் கோலார் - அரக்கூட்டிய
கோலையுடைய தூதர்கள், விரைவின் ஓடி - விரைந்து ஓடிச்சென்று, செம்பினை வெய்தாய்
உருக்கி - செம்பை மிக்க வெப்பமுடையதாக உருக்கி, செவி முதல் சொரிந்ததேபோல் -
காதுகளிலே பெய்தாற்போலே, தம்பியர் பாடும் - மணிகண்டன் முதலிய நான்கு தம்பியரும்
மாண்டமையும், மக்கள் இறந்ததும் - கனகசித்திரன் முதலிய தன் மக்கள் இறந்தமையும்,
தனக்குப் பாங்காய் - தனக்குத் துணையாகச் சென்ற, வெம்பியவீரர் - சினங்கொண்ட தன்
மறவர் பலர், விளிந்ததும் - மாண்டமையும், உரைத்தனர் - எடுத்தியம்பினர், (எ - று.)
 

அப்பொழுது மணிகண்டன் முதலிய தம்பிமார்களும் கனகசித்திரன் முதலிய மக்களும்
ஒருசேர மாண்டார் என்று அச்சுவகண்டனுக்குத் தூதர் உணர்த்தினர்; அத்தூதர் கூறிய
சொற்கள் தன் காதில் செம்புருக்கினை வெய்தாய் ஊற்றினாற் போன்று சுட்டது என்க

 (294)