கூளிகளின் தன்மை

1429. பட்டடி நெடிய வீங்கு
     பரட்டின நொடிக்குங் கால
ஒட்டிய வயிற்ற வற்ற
     லுகிரிடை மயிர முன்கை
கட்டிய கண்ணி பீலித்
     தலையின கழற்காய் போல
வட்டமா யுருளுங் கண்ண
     கணங்கள்வந் திரைத்த வன்றே.
     (இ - ள்.) பட்டு அடி - பூமியிலே படும் உள்ளடி, நெடிய - நீளியவாயவும்,
வீங்குபரட்டின - பருத்த பரடுகளையுடையனவும், நொடிக்கும் கால - நுடங்குகின்ற
கால்களையுடையனவும், ஒட்டிய வயிற்ற - முதுகோடொட்டிய வயிற்றை உடையனவும்,
வற்றல் - வற்றிய உடலுடையனவும், உகிரிடை மயிர முன்கை - நகங்களிடத்தே
மயிர்செறிந்த முன் கைகளையுடையனவும், கட்டிய கண்ணி பீலித் தலையின - கட்டப்பட்ட
முடிக்கண்ணியையும் மயிற்பீலியையும் சூட்டிய தலையுடையனவும், கழற்காய்போல வட்டமாய்
உருளும் கண்ண - கழற்சிக் காயைப்போன்று வட்டவடிவினவாய் உருளாநின்ற விழிகளை
உடையனவும் ஆகிய, கணங்கள் வந்து இரைத்த அன்றே - பேய்க்கணங்களும்
அப்போர்க்களத்தே வந்து முழங்கின, அன்றே : அசை, (எ - று.)

     பட்டஅடி - பட்டடி என நின்றது. அடி நெடியவும் பரட்டினவும் காலவும் வயிற்றவும்
மயிரையுடைய முன்கையவும் தலையினவும் கண்ணவுமாகிய கணம் வந்திரைத்தன என்க.

(299)