திவிட்டன் பேருருக் கோடல் | 1436. | பேயெரி யுமிழ்ந்து நம்மேல் வருமெனப் பேசு கின்றாய் நீபெரி தினியை யென்னா நெடியவ 1னதனை நோக்கிக் காயெரி சுடர்விட் டாங்குக் கனன்றனன் கனல லோடு மாயிரு விசும்பு மஞ்சும் வடிவினன் வள்ள லானான். | இ - ள்.) பேய் எரி உமிழ்ந்து நம்மேல் வரும் எனப் பேசுகின்றாய் - ஓர் எளிய பேய் தீக்கான்று நம் மேலே போர் செய்யவரும் என்று கூறாநின்றாய், நீ பெரிது இனியை - நீ பெரிதும் இனிய மொழியை உடையாய், என்னா - என்று கூறி, நெடியவன் - திவிட்டன், அதனை நோக்கி - அச்சண்ட வேகையின் மாயச் செயலைப்பார்த்து, காய் எரி சுடர் விட்டாங்கு - சுடுகின்ற ஊழித் தீ சுடர்களைக் கக்கினாற்போன்று, கனன்றனன் - சினந்தான், கனலலோடும் - அவ்வாறு சினங்கொண்டவுடனே, வள்ளல் - திவிட்டன், மா இரு விசும்பும் அஞ்சும் வடிவினன் ஆனான் - மிகப் பெரிய விசும்பும் இவன் உருவத்திற்கு யாம் இடமுடையேம் அல்லம் என அஞ்சுதற்குக் காரணமான பேருருவத்தை எய்தினவன் ஆயினன், (எ - று.) எளியபேய் தீக்கான்று நம்மேல் போர் செய்யவரும் என்றனை உன் மொழி இனிதாயிருந்தது என்று கூறித் திவிட்டன் அப் பேயினைப் பார்த்து வெகுண்டானாக; வெகுளுதலோடே விசும்பும் அஞ்சும் பேருருவம் எய்தி நின்றான் என்க. | (306) | | |
|
|