திவிட்டன் வருணக்கணையால் அதனை அவித்தல்

1454. காரணி வண்ணன் கண்டே கதிர்மணிக் கடகக் கையால்
வாருண மென்னு மம்பு வாங்கினன் றொடுத்த லோடும்
சீரணி விசும்பு மண்ணுந் திசைகளு மிருளச் 2சேர்ந்து
நீரணி புயலின் றாரை நிரந்து வீழ்ந் தவித்த தன்றே.
     (இ - ள்.) கார் அணி வண்ணன் கண்டே - முகில் போன்று அழகிய நிறமமைந்த
திவிட்டன் அத் தீக்கணை வருதலைப் பார்த்து, கதிர்மணிக் கடகக் கையால் - ஒளியுடைய
மணிகள் அழுத்திய கடகம் பூண்ட தன்கையாலே, வாருணம் என்னும் அம்பு வாங்கினன் -
வாருணம் என்று கூறப்படும் நீர்க்கணை ஒன்றனைத் தன் தூணியினின்றும் எடுத்து,
தொடுத்தலோடும் - அதற்கு எதிராகத் தொடுத்தவுனே, சீர் அணி விசும்பும் மண்ணும் திசைகளும் இருளச் சேர்ந்து - புகழுடைய விண்ணும் நிலவுலகும்
திக்குகளும் இருண்டு போம்படி எய்தி, நீர் அணி புயலின் தாரை - நீரால் அழகுடைத்தாய
புயல்துளிக்கும் தாரைபோன்ற தாரைகளை, நிரந்து - எவ்விடத்தும் பரப்பி, வீழ்ந்து -
வீழ்த்தி, அவித்ததுஅன்றே - அத்தீக்கணையை அவித்தொழித்தது,
அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     அச்சுவகண்டன் எய்த தீக்கணையை நம்பி வருணக்கணை யேவி அவித்தான் என்க.
(324)