அச்சுவகண்டன் துயிலம்பு தொடுத்தல்

1455. விண்களை வெதுப்பு நீர்மை
     1வெய்யனுள் வெகுண்டு மீட்டும்
கண்களைத் துயிற்று மம்பு
     தொடுத்தனன் றொடுத்த லோடும்
மண்களை மயக்கி மாக்க
     டுயில்கொள மரங்கள் சாயப்
புண்களை யணையும் வேலான்
     படைமுகம் புக்க தன்றே.
     (இ - ள்.) விண்களை வெதுப்பு நீர்மை - விசும்பைச் சுட்டெரிக்கும் தன்மையுடைய,
வெய்யன் - அச்சுவகண்டன், உள் வெகுண்டு - மனம் அழன்று, மீட்டும் - மறுபடியும்,
கண்களைத் துயிற்றும் அம்பு தொடுத்தனன் - கண்களைமூடி உறங்கச்செய்யும் ஒரு
துயிலம்பைத் தொடுத்தேவினான், தொடுத்தலோடும் - அவ்வம்பு தொடுத்தவுடனே,
மண்களை மயக்கி - அத்துயிலம்பு உலகங்களில் வாழும் உயிர்களின் அறிவை மயக்கி,
மாக்கள் துயில்கொள - மனிதர் எல்லாம் உறங்கி வீழவும், மரங்கள் சாய - மரங்கள்
சாய்ந்து வீழவும் செய்து, புண்களை அணையும் வேலான் - புண்களிற் புகுகின்ற
வேற்படையையுடைய திவிட்டனுடைய, படைமுகம் - படைகளினிடத்தே, புக்கது - புகுந்தது,
அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     துயில் அம்பு - உறங்கச் செய்யும் அம்பு. தீக்கணை ஒழிந்தமை கண்ட
அச்சுவகண்டன் சினம் மிகுந்து உயிர்களை உறங்கச் செய்யுமொரு கணையை விட்டான்.
அது மனிதர்களும் மரங்களும் உறங்கிக் கிடக்கும்படி செய்துகொண்டு வந்ததென்க.
ஆறறிவுயிராகிய மனிதரையும் ஒரறிவுயிராகிய மரங்களையும் சுட்டிக் கூறினமையால் இடை
நின்ற எல்லாவுயிரும் உறங்கிவீழ என்றும் கொள்க.

(325)