திவிட்டன் துயில்விடை யம்பு தொட்டு
அதனை மாற்றுதல்

1456 அயிலுடை யனல்செய் வேலோ
     னதனையு மறிந்து மற்றுத்
துயில்விடை செய்யு மம்பு
     தொடுத்தனன் றொடுத்த லோடும்
வெயிலிடை விரிந்து விண்பால்
     விளங்கி வீ1ழிருளை நீக்கப்
பயிலுடை யுலகந் தேறிப்
     பட்டது முணர்ந்த தன்றே.
     (இ - ள்.) அயில் உடை அனல் செய்வேலோன் - கூரியதாய்த் தீக்காலும்
சினவேலையுடைய திவிட்டன், அதனையும் அறிந்து - அத்துயிலம்பு வருகையையும்
அறிந்துகொண்டு, துயில் விடை செய்யும் அம்பு தொடுத்தனன் - துயில் அகற்றும்
இயல்பிற்றாய துயில்விடை அம்பொன்றை அதற்கெதிரே தொடுத்துவிட்டான்,
தொடுத்தலோடும் - அத்துயில் விடையம்பைத் தொடுத்தவுடனே, வெயில் இடைவிரிந்து
விண்பால் விளங்கி வீழ் இருளைநீக்க - வெயில் ஒளி இடையே விரியப் பெற்று
விண்பகுதியெல்லாம் விளக்க முறும்படி உண்டாகிய பேரிருளை அகற்றியதாக, பயில் உடை
உலகம் தேறி - உறக்கத்தே பயின்ற உலகம் முழுதும் அவ்வுறக்கம் தெளியப்பெற்று,
பட்டதும் உணர்ந்தது - இடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கொண்டது,
அன்று, எ : அசைகள், (எ - று.)

     துயில் விடை அம்பு - உறக்கம் விடுவித் தெழுப்பும் அம்பு.

     உலகம் உறங்குமாறு செய்யும் துயிலம்பின் வருகையை உணர்ந்த நம்பி, அதற்கு
மாறாகத் துயில்விடை அம்பு தொடுத்தான், அஃது உறக்கத்தே வீழ்ந்த உயிர்களின்
துயிலெடுப்பி, உலகை மூடிய இருளையும் அகற்ற எல்லாரும் உணர்வு பெற்றனர் என்க.

 (326)