1467 | வலியு மடுதிறனும் வாழ்வும் வனப்பும் பொலிவுங் கடைபோகா பூமிமேல் வாழ்வீர் கலியன்மி னென்றிதனைக் காட்டுவான் போல மலிபொன் மணிமுடியான் மற்றிவனோ மாய்ந்தான். | (இ - ள்.) பூமிமேல் வாழ்வீர் வலியும் - இவ்வுலகின் வாழ்வீர்காள் நீயிர் பெற்றுள்ள உடல் வன்மையும், அடுதிறனும் - பகைவரைக் கொல்லும் பேராற்றலும், வனப்பும் - நீங்கள் எய்தியுள்ள இளமையும், வாழ்வும் - எய்தியுள்ள வாழ்க்கை வளமும், பொலிவும் - தோற்றமும், கடைபோகா - கடைசெல்ல நில்லா, கலியன்மின் - ஆதலால் இவையிற்றை எய்தியுள்ளேம் எனச் செருக்குறாதே கொண்மின், என்று - என்று கூறி, காட்டுவான் போல - இவ்வுண்மையைத் தன்பாலே வைத்துக் காட்டுகின்றவனைப் போன்று, பொன்மலி மணிமுடியான் - பொன்மிக்க மணிகள் அழுத்திய முடியுடையனாகிய, மற்று இவனோ - இவ் வச்சுவகண்டன், மாய்ந்தான் - மாண்டொழிந்தான், (எ - று.) வலியும், ஆற்றலும், வாழ்வும், அழகும், தோற்றமும், கடைபோக நிற்கமாட்டா; ஆதலின், இவற்றைப் பொருளாகக் கொள்ளன்மின் என்று உலகத்தார்க்கு விளக்குவானைப் போன்று அச்சுவகண்டன் மாண்டான் என்க. இம்மூன்று செய்யுளும், “கழிந்தோர் தேஎத்து அழிபட ருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை“ (தொல் - புறத். 79) என்க. | (337) | | |
|
|