ஊழ் நிகழ்ச்சி அறியலாகாதெனல்

1468. மாக மழைவண்ணன் மாற்றான்மேல் விட்டெறிந்த
வேக விறலாழி மீட்டே பெயர்ந்துதன்
போக வரைமார்பம் போழ்படுப்பப் பொன்றினான்
ஆகுவ தாமதனை யாவ ரறிகிற்பார்.
     (இ - ள்.) மாகம் மழைவண்ணன் - விசும்பின் கண்ணதாகிய முகில்போலும்
நிறமுடைய அச்சுவகண்டன், மாற்றான் மேல் விட்டெறிந்த - தன் பகைவனாகிய திவிட்டன்
மேலே விசைத்து வீசிய, வேகவிறல் ஆழி - விரைந்த செலவினையுடைய வெற்றிச்சக்கரம்,
மீட்டே பெயர்ந்து - மீண்டும் திரும்பி, தன் போக வரை மார்பம் - தனது போகத்திற்குக்
காரணமான மலைபோன்ற மார்பினை, போழ்படுப்ப - பிளந்திட, பொன்றினான் -
மாள்வதானான், ஆகுவது ஆம் - ஊழால் நிகழ்தற்குரிய எச் செயலும் நிகழ்ந்தே தீர்வதாம்,
அதனை - அங்ஙனம் நிகழ்கின்ற செயல்களை, யாரே அறிவர் - முன்னரே
அறிந்துகொள்ளவல்லார் யாரே உளர், (எ - று.)

“சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
     உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்“

     இஃது ஊழின் இயற்கை; ஊழினது செயலை மானிடர் அறிந்துகொள்ளும் வன்மை
யுடையோரல்லர் என்று இரங்கிய படியாம்.

(338)