வாயுவேகையின் மேன்மை

147. பைம்பொற் பட்ட மணிந்தகொல் யானையான்
1அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினாள்.
 

     (இ - ள்.) செம்பொன்பட்டம் செறிந்த - சிவந்த பொன்னினாலாகிய பட்டம்
பொருந்திய; திருநுதல் - அழகிய நெற்றியையும்; அம் பொன்பட்டு உடையாள் - அழகிய
பொன் பட்டாடையை உடையவளுமான அந்த வாயுவேகை என்பவள்; பைம்பொன் பட்டம்
அணிந்த கொல் யானையான் - பசிய பொன்னினால் ஆகிய பட்டத்தை
நெற்றியிலணிந்ததும் கொலைத் தொழிலையுடையதுமான யானையையுடைய
சுவலனசடியரசனின்; அம்பொன் பட்டம் நறுங்குழலார்க்கு எலாம் - அழகிய நெற்றிப்
பட்டத்தையணிந்தவர்களும் மணந்தங்கிய கூந்தலையுடையவர்களுமான மனைவியர்கள்
எல்லோருக்கும்; அணி ஆயினாள் - அணிகலன்போலச் சிறந்து திகழ்ந்தாள், (எ - று.)

     “பட்டம்“ என்ற சொல் ஒரு பொருளில் மும்முறை வந்தது, சொற்பொருட்பின்
வருநிலை. அவ்வரசனுடைய பட்டத்துத் தேவியர் அனைவருள்ளும் வாயுவேகை சிறந்து
நின்றனள் என்க.
 

( 29 )