1475. | குழவி நாயிற் றெழிலேய்க்குங் குழம்பார் கோலக் குங்குமமே மெழுகி மீதோர் மணியாரம் வீசிக் கிடந்த விரையாகம் ஒழுகு குதுதிச் சேறாடி யோடை யானை நுதன்மீது வழுவி வீழ்ந்த வகைநாடின் மாயம் போலு மறவேந்தே. | (இ - ள்.) குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் - இளஞாயிற்றின் அழகை ஒத்த, குங்குமம் குழம்பு ஆர்கோலம் மெழுகி - குங்குமச் சேற்றாலே பொருந்த ஒப்பனையமைய மெழுகி, மீது ஓர் மணியாரம் வீசி - மேலே ஒரு மணிவடம் புரண்டு கிடக்கப்பெற்ற, விரை ஆகம் - நறுமணமுடைய நின் திருமார்பு, ஒழுகு குருதிச்சேறு ஆடி - புண்களினின்றும் ஒழுகிய குருதிக் குழம்பிலே முழுகப்பெற்று, ஓடையானை நுதல்மீது - முகபடாமுடைய யானையின் நெற்றிமீது, வழுவி - நழுவி, வீழ்ந்த வகை நாடின் - விழுந்துள்ள தன்மையை ஆராயுமிடத்தே, மறவேந்தே - வீர மன்னனே, மாயம் போலும் - எமக்கு ஒரு மாயவித்தை போலத் தோன்றா நின்றது. (எ - று.) நாயிறு - ஞாயிறு ; போலி. மாயம் - இந்திரசால முதலியன. குங்குமக் குழம்பு நீவி மணியாரம் வீசி இளஞாயிறுபோற் றிகழ்ந்த உன் மேனி, அந்தோ குருதிச் சேறு படிந்து யானை நெற்றியின்மீது வழுவி வீழ்ந்துள்ள நிகழ்ச்சியைக் கருதுங்கால் எமக்கு மாயம்போலத் தோன்றாநின்ற தென்றார் என்க. | (345) | | |
|
|