1482. தொழுதுஞ் சூழ்ந்து மடிபற்றித்
     தொடர்ந்துஞ் சுரும்புண் 1கோதைநிலை
வழுவ மயங்கி மாழாந்து
     மருண்டுந் தெருண்டு மடவார்கள்
அழுத கண்ணீ ரகன்ஞாலத்
     தரச ருருக வருவியாய்
ஒழுக நெடுமான் முனிவென்னு
     மூழித் தீயு மவிந்ததே.
     (இ - ள்.) தொழுதும் - அச்சுவகண்டனை வணங்கியும், சூழ்ந்தும் - அவனுடைலைச்
சூழ்ந்துகொண்டும், அடிபற்றித் தொடர்ந்தும் - அவன் அடிகளை ஒருவர்பின் ஒருவராய்த்
தொடர்ந்து பிடித்தும், சுரும்புண் கோதை நிலை வழுவ மயங்கி - வண்டுகள் தேன்பருகும்
தம் மலர்மாலைகள் நிலையினின்றும் வழுவி வீழுமாறு மயக்கம் எய்தியும், மாழாந்தும் -
துயரத்தே அழுந்தியும், மருண்டும் - வியப்புற்றும், தெருண்டும் - சிறிது தெளிவுற்றும்,
மடவார்கள் - அச்சுவகண்டன் மனைவிமார்கள், அழுத கண்ணீர் - அழுதலாலே பெருகிய
கண்ணீர், அகன் ஞாலத்து அரசர் உருக - விரிந்த உலகத்தை ஆளும் பகைவேந்தருடைய
உள்ளத்தையும் உருகச்செய்து, அருவியாய் - மலையருவி போலே, ஒழுக - மிக்குப்
பாயாநிற்ப, நெடுமால் - திவிட்ட நம்பியினுடைய, முனிவென்னும் - சினம் என்று
கூறப்படுகின்ற, ஊழித் தீயும் - உலகை அழிக்கும் நெருப்பும், அவிந்தது ஏ -
அவியலாயிற்று, (எ - று.)

     மடவார்கள் சூழ்ந்தும் தொடர்ந்தும் மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும்
அழுதகண்ணீர் அரசர் உளமுருக்கி அருவியாய்ப் பாயா நிற்ப, நம்பியின் சினம் என்னும்
ஊழித்தீயும் அவியலாயிற்று என்க.

 (352)