அச்சுவகண்டன் மனைவியரின் தாபதநிலை | 1485. | ஆவி யாய வயக்கிரீவற் கமிர்தம் பூத்த வஞ்சாயற் றேவி மார்கள் கலனழித்துச் சேணி யுலகஞ் 1சென்றெய்தி வீவில் காமன் வருவீதி கற்பு வேலி யால்விலக்கித் தாவி னிறையின் 2றாழதனாற் பொறியின் வாயி றாழ்ப்பெய்தார். | (இ - ள்.) அயக்கிரீவற்கு - அச்சுவகண்டனுக்கு, ஆவியாய - உயிரை ஒத்தவரும், அமிர்தம் பூத்த - அமிழ்தத்தால் இயன்றதனை ஒத்த, அம்சாயல் - அழகிய தோற்றத்தையுடையோரும், தேவிமார்கள் - அவன் மனைவியரும் ஆகிய மகளிர்கள், கலன் அழித்து - மங்கல அணி முதலிய அணிகலன்களைக் களைந்து நீத்து, சேணி உலகம் சென்று எய்தி - தம் மலையுலகத்தை அடைந்து, வீவுஇல் காமன் - அழிவில்லாதவனாகிய மதவேள், வருவீதி - தம்பால் எய்தும் வாயிலை, கற்பு வேலியால் விலக்கி - கற்பாகிய திண்ணிய வேலியாலே தடைசெய்து, தாஇல் - குற்றமற்ற, நிறையின் - செறிவு என்னும், தாழதனால் - தாழக்கோலாலே, பொறியின் வாயில் - ஐம்பொறிகளாகிற வாயில்களை, தாழ்ப்பெய்தார் - தாழிட்டனர், (எ - று.) சேணி - ச்ரேணி என்பதன் திரிபு. அமிர்தம் பூத்த அஞ்சாயல் தேவிமார்கள் கலன் கழித்து உத்தர சேடிக்கட் சென்று காமன் வரும் வழியைக் கற்பு வேலியால் அடைத்துப் பொறிவாயிலை நிறையாகிய தாழ்ப் பெய்தனர் என்க. இது தாபதநிலை எனப்படும். | (355) | | |
|
|