வான் தருமொழி (அசரீரி வாக்கு)

1487. அரிதினி னவனெய்த தெய்வ வம்புக
ளுரிதினி னறுத்தொளிர் நேமி கொண்டது
பெரிதிது சித்திர மென்று பேரொலி
விரிதரு விசும்பிடை விரவி 1நின்றதே
     (இ - ள்.) அரிதினின் அவன் எய்த தெய்வ அம்புகள் - விலக்கரியதோர் ஆற்றானே
அவ்வச்சுவகண்டன் விடுத்த கடவுட் டன்மையுடைய அம்புகளை, உரிதினின் - தனக்குரிய
அம்பினாலே, அறுத்து - அறும்படி மாற்றி, ஒளிர் நேமி கொண்டது இது - திகழுகின்ற
அவனது ஆழிப்படையைத் தனதாக்கிக் கொண்ட இச்செய்கை, பெரிது சித்திரம் - பெரிதும்
வியத்தற்குரியதாயிருந்தது, என்று - என்று கூறியதோர், பேரொலி - பெரிய முழக்கம்,
விரிதரு விசும்பிடை - அகன்ற வான்முழுதும்,
விரவி நின்றதே - பரவி நிற்பதாயிற்று, (எ - று.)

     அச்சுவகண்டன் விடுத்த தடுத்தற்கரிய தெய்வக் கணைகளைத் தடுத்து அவனது
ஆழிப்படையைத் தனதாக் கொண்டேவிய செயல் வியப்புடைத்தென்று வான்மொழி கூறிய
பேரொலி விசும்பு முழுதும் பரவிற் றென்க.

(357)