அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்

149. முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் 1பெய்கழல்
அருக்க கீர்த்தியென் பானலர் தாரினான்.
 

     (இ - ள்.) முருக்கு வாயவள் முள் எயிற்று ஏர்நகை உருக்க - பலாச மரத்தின் மலர்
போன்ற சிவந்த வாயையுடைய வாயு வேகையினது கூரிய பற்களினின்று உண்டாகின்ற
அழகிய புன்னகையானது தன்னுள்ளத்தையுருகச்செய்ய; வேந்தன் ஒருங்கு உறைகின்றநாள் -
சுவலனசடி மன்னன் அம் மனைவியுடன் கூடிவாழ்கின்ற காலத்தில்; அலர்தாரினான் -
மலர்ந்த மலரினால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்தவனாகிய; பெய்கழல் - மறக்
கழலையணிந்த; அருக்க கீர்த்தி என்பான்- அருக்க கீர்த்தியென்னும் பெயரினையுடையவன்,
பெருக்கம் ஆகப் பிறந்தனன் - சிறப்புண்டாகுமாறு தோன்றினான், (எ - று.)

     வாயுவேகையோடு சுவலனசடி யரசன் இன்பந்துய்த்து வாழுங் காலத்தில் அருக்க
கீர்த்தி என்னும் மகன் தோன்றினன் என்க. முருக்கு - பலாசமரம்; அதன் மலர்க்கு
முதலாகுபெயர். “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு“ என்பது
பற்றிப் பெருக்கமாகப் பிறந்தனன் என்றார்.
 

( 31 )