திவிட்டனை வாசுதேவன் எனப் பாராட்டி முடியணிதல்

1499. விட்டெரி மணிவரை நேமி வேந்தனை
அட்டிவ னெய்தினா னாழி யாதலான்
மட்டிவ ரலங்கலான் வாசு தேவனென்
றொட்டிய வொளிமுடி யொன்று சூட்டினார்.
     (இ - ள்.) விட்டு - சுடர்வீசி, எரி - ஒளிர்கின்ற, மணிவரை - இரத்தின பல்லவம்
என்னும் மலையை உடைய, நேமி வேந்தனை - சக்கரத்தையுடைய பிரதி வாசுதேவனாகிய
அச்சுவகண்டனை, அட்டு - கொன்று, இவன் - இத்திவிட்டன், ஆழி எய்தினான் ஆதலான்
- தனக்குரிய சக்கரப் படையை அவன்பாலிருந்து பெற்றானாதலாலே, மட்டு இவர்
அலங்கலான் - தேன் துளும்புகின்ற மலர்மாலையையுடைய இவன், வாசுதேவனே -
வாசுதேவனே ஆவான், என்று - என்று கூறி, ஒட்டிய ஒளி முடி - பொருந்திய ஒளியை
உடைய முடிக்கலன், ஒன்று - ஒன்றனை, சூட்டினார் - திவிட்டநம்பியின் - தலையிலே
சூட்டினார்கள், (எ - று.)

பிரதி வாசுதேவனாகிய அச்சுவகண்டனைக் கொன்று அவன் ஆழியையும்
கைப்பற்றினமையால் நம்பி வாசுதேவனே என்று புகழ்ந்து முடிக்கலன் அணிந்தனர் என்க.

(369)