சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்

150. நாம நல்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
1காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்.
 

     (இ - ள்.) அம்நகை - அழகிய பற்களையும்; தாம மல்லிகைமாலை - ஒளியுள்ள
மல்லிகை மாலையையும் உடைய; சயம்பவை - சுயம்பிரபை என்பவள்; ஏமம் நம்உலகின்
இழிந்து - இன்பமே நுகருமிடமான விண்ணுலகினின்றும் இறங்கி; நாமநல் ஒளி வேல்நம்பி
நங்கையாய் - அச்சத்தை யுண்டாக்குவதும் நல்ல ஒளியுள்ளதுமான வேற்படையையுடைய
சிறந்தோனாகிய அருக்ககீர்த்தியின் தங்கையாய்; காமவல்லியும் காமுறத் தோன்றினாள் -
கற்பகத்திற் படரும் காம வல்லிக்கொடியும் தன் அழகைக் கண்டு விரும்புமாறு பிறந்தாள், (எ - று.)

     அருக்க கீர்த்திக்குத் தங்கையாகச் சுயம்பிரபை என்பவள் தோன்றினாள் என்க. நம்பி
என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர்; நங்கை என்பது பெண்பாற் சிறப்புப்பெயர்; நம்பி
நங்கையாய் - என்பதற்குச் சிறந்த ஆண்மகனான சுவலனசடியின் சிறந்த மகளாக என்று
பொருள் உரைப்பினுமாம். முற்பிறப்பிலே தேவலோகத்தில் வாழ்ந்த உயிர் பிற்பிறப்பில்
இம்மகளாகப் பிறந்ததென்பார், “ஏமநல்லுலகின் னிழிந்து தோன்றினாள்“ என்றார்.
உலகின்னிழிந்து: னகரமெய் விரித்தல் விகாரம். ஸ்வயம்பிரபா - என்னும் வடசொல்
இயற்கை யொளியுடையாள் என்று பொருள்தரும்.

( 32 )