இதுவுமது

1508. எழுவகை யருங்கல மிரண்டு மாநிதி
தழுவின சனபத 2மீரெண் ணாயிரம்
விழவணி நகர்களும் வேந்தர் கூட்டமு
மெழுவின முரைப்பினிவ் வெண்ண வென்பவே.
     (இ - ள்.) எழுவகை அருங்கலம் - ஏழுவகைப்பட்ட அருங்கலங்களும், இரண்டுமாநிதி
- இரண்டுவகைச் சிறப்புடைய நிதிகளும், ஈரெண்ணாயிரம் தழுவின சனபதம் -
பதினாறாயிரம் ஆகிய ஒன்றை யொன்று தழுவப் பெற்ற நாடுகளும், விழவணி நகர்களும் -
விழாக்களாலே அழகுற்ற மாநகரங்களும், வேந்தர் கூட்டமும் - ஐவகைக்குலத்து அரசர்
கூட்டமும், எழுவினம் - கிளர்ந்தெடுத்தோமாய், உரைப்பின் - கூறுவோமெனில், இ எண்ண
- இத்துணையன, என்பவே - என்று மேலோர் உரைத்தனர், (எ - று.)

     வாசுதேவனின் செல்வங்களைப்பற்றி ஸ்ரீபுராணத்தில் பின் வருமாறு கூறப்பட்டது :-
“வாசுதேவனுக்குச் சுயம்பிரபை முதலிய பதினாறாயிரம் மனைவியர் உளர் ; அத்துணை
நாடுகள் உள; மூதூர்கள், ஒன்பதினாயிரத்துத் தொண்ணூற்றைம்பதுள, பட்டணங்கள்
இருபத்தையாயிரம், உள, கர்வடங்கள் பன்னீராயிரமும், மடப்பங்கள் பன்னீராயிரமும்
கேடங்கள் எண்ணாயிரமும், அந்தரத்தீவுகள் இருபத்தெட்டும், கிராமங்கள் நாற்பத்தெடடுக்
கோடியும், யானைகள் நாற்பத்திரண்டு நூறாயிரமும், அத்துணை ரதங்களும், ஒன்பதுகோடி
குதிரைகளும், நாற்பத்திரண்டுகோடி காலாட்களும், எண்ணாயிரம் கணபத்ததேவர்களும்,
சக்கரம் தடி, வேல் வாள் வில் கௌத்துவமணி சங்கு என்னும் ஏழுவகை அருங்கலங்களும்
...... உள்ளன.

(378)