வாசுதேவர் குன்றெடுத்தமை கூறல்

1509.

1வன்றிறன் மலிபல தேவர் தம்மொடு
சென்றவர் செற்றலர்ச் செகுத்துப் பின்னரே
குன்றமொன் றெடுத்தலுங் 2கொண்டு கூறினார்
பொன்றலில் புராணநூற் புலவ ரென்பவே.

     (இ - ள்.) வன் திறல் மலி - வலிய ஆற்றல் மிக்க, பலதேவர் தம்மொடு - பல
தேவரோடு, சென்றவர் - சென்ற வாசுதேவர், செற்றலர்ச்செகுத்து - தம் பகைவராகிய
பிரதிவாசுதேவர் முதலியோரை வென்று, பின்னரே - அதன்பின்னர், குன்றம் ஒன்று
எடுத்தலும் - ஒருமலையைத் தூக்கிய வரலாற்றினையும், கொண்டு - புராணத்தினின்றும்
மேற்கொண்டு, கூறினார் - திவிட்டனுக்குக் கூறினார்கள், பொன்றலில் - அழிதலில்லாத,
புராண நூற் புலவர் - புராணம் கூறுதலில் வல்ல நல்லிசைப் புலவர்கள், என்பவே - என்று
அறிஞர் கூறுவர், (எ - று.)

     வலிய திறலுடைய பலதேவருடன் சென்று  பிரதிவாசுதேவரைக்  கொன்றருளிய
பின்னர்க் குன்றமெடுத்த  வரலாறுண்மையையும்  புலவர்  புராணத்தினின்றும்  எடுத்துக்
கூறினர், என்க.

(379)