(இ - ள்.) செக்கர்வான் - செவ்வானமானது; கங்கை நீரன - கங்கையாற்றின் நீரைப்போல்; ஞான்ற - ஒழுகிய; கதிர் - ஒளிகளையுடைய; இளந் திங்களால் - பிறைத் திங்களினால்; தொழப்பட்டது - வணங்கப் பெற்றது; அதைப்போல; மங்கைமார் பிறப்பும் - பெண்களின் பிறப்பும்; மடமாதர் இந் நங்கையால் - மடமையையும் அழகையுமுடைய இச்சிறந்த பெண்ணால்; தொழப்பாடு நவின்றது - வணங்கப்படுதற் றன்மையைப் பெற்றது, (எ - று.) தன்கண் பிறைதோன்றலால் செக்கர்வானம் தொழப்படுகின்றது. தன்கண் சுயம்பிரபை தோன்றலால் பெண்குலம்தொழுந் தகுதியுடைத்தாயிற்று என்பது கருத்து. ஞான்ற - நான்ற; முதற்போலி. நால்; பகுதி. மாலைப்பொழுதில் பிறையைத் தொழுதல் மரபு. மடமாதர் - மடமையையுடைய மாதர். மடமையாவது எல்லாம் அறிந்தும் ஒன்றையும் அறியாது போன்றிருக்குந் தன்மை. |