புருவங்கள் துவளுதல்

153.

காதின் மீதணி கற்பகத் தொத்திணர்
ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
1போது தேர்முகத் தும்புரு வக்கொடி
நோத லேகொல்நொ சிந்துள வாங்களே.
     (இ - ள்.) காதின் மீது அணி - சுயம்பிரபை காதின்மேல் அணிந்த; கற்பகத் தொத்து - கற்பகப் பூங்கொத்தில்; இணர் ஊது - தாதுண்ணவந்த; தேன் - வண்டுகள்; இறகு ஊன்றி இருத்தொறும் - இறகுகளைப் பதிய வைத்து அமருந்தோறும்; நோதலேகொல் - அச்சுமையைத் தாங்கமுடியாது வருந்துதலினாற்போலும்; போது தேர்முகத்தும் புருவம் கொடி - செந்தாமரை மலர்போன்ற அவள் முகத்திலுள்ள கொடிபோன்ற புருவங்கள்; நொசிந்துள - வளைந்துள்ளன; (எ - று.) ஆம், கள் : அசைநிலைகள்.

கொடிபோல மெல்லியனவாய் வளைந்து நீண்டுள்ள அவளது புருவங்கள் இயல்பாக வளைந்திருத்தற்கு, அவள் காதிலணிந்துள்ள கற்பகப் பூங்கொத்தில் தாதூத வந்த வண்டுகள் அங்கு இறகூன்றி யிருத்தலாகிய பாரத்தைப் பொறுக்கமாட்டாமல் அவை துவள்கின்றன போலுமென ஒரு காரணம் கற்பித்தனர். தேர் : உவமச்சொல்.
 

(55)