1530. போர்மேக மன்னதிறற் பொருகளிற்று
     மேலரசர் போற்றுக் கூவச்
சீர்மேக மெனச்செறிக ணிடிமுரசங்
     கடிததிர்ந்து திசைமே லார்ப்ப
நீர்மேக முத்தினெடுந் தண்குடைக்கீழ்
     நிழற்றுளும்பு நேமி தாங்குங்
கார்மேக வண்ண னிவன் வருவானைக்
     காண்மினே கண்க ளார.
     (இ - ள்.) மேகம் அன்ன போர் திறல் பொரு களிற்று மேல் - முகில் போன்ற
போர்த்தொழில் ஆற்றல் மிக்க போர் யானைகளின் எருத்தத்தே வீற்றிருந்து, அரசர்
போற்றுக்கூவ - மன்னர்கள் வாழ்த்துக்கூற, சீர்மேகம் என - சிறந்த முகில் முழங்கினாற்
போலே, செறிகண் இடிமுரசம் - செறிந்த கண்ணிடத்தே அறைதலையுடைய முரசம், கடிது
அதிர்ந்து - பெரிதும் முழங்கி, திசைமேல் ஆர்ப்ப - திசைகளிடத்தே ஆரவாரிப்ப, நீர்மேக
முத்தின் நெடுந்தண் குடைக்கீழ் - நீர் பொருந்திய மேகத்திலே விளைந்த முத்தினாலே
புனையப்பட்ட நெடிய குளிர்ந்த திங்கட்குடையின் கீழே,

      நிழல் துளும்பும் நேமி தாங்கும் - ஒளி தவழ்கின்ற சக்கரப் படையை ஏந்துகின்ற,
கார் மேக வண்ணன் - கரிய மேகவண்ணனாகிய திவிட்டன் என்னும், இவன் -
இப்பெரியோன், வருவானை - வருகின்றவனை, கண்கள் ஆர - கட்பொறிகள்
நனிபொருந்தி மகிழ, காண்மின் ஏ - காணுங்கோள், ஏ: அசை, (எ - று.)

     முகில் போன்ற களிற்றின் எருத்தத்தே யிருந்து, அரசர் போற்றுக்கூவ, முரசமார்ப்பத்
தண்குடைக்கீழ், நேமி தாங்கும் கார்மேக வண்ணன் வருவானை, கண்களாரக்
காணுங்கோள் என்றார் என்க.

(400)