1531. செந்தாஅ மரைபுரையுஞ் செழுங்கண்ணுந்
     தடக்கையும் பவளவாயும்
அந்தாஅ மரைநாறு மடியிணையு
     மவையவையே காண்மின் காண்மின்
நந்தாஅ மரைநாட னகையிலங்கு
     மணியார நவின்ற மார்பம்
பைந்தாஅ மரைமடந்தை பாராட்டப்
     பொலிந்திலங்கும் படியுங் காண்மின்.
     (இ - ள்.) செந்தாஅ மரை புரையும் - சிவந்த தாமரை மலரையே ஒப்பனவாம்,
செழுங்கண்ணும் - கண்ணோட்டமிக்க கண்களும், தடக்கையும் - பெரியகைகளும்,
பவளவாயும் - பவள நிறமுடைய திருவாயும், அந்தாமரை - அழகிய அத்தாமரை
மலரையே ஒப்பன, நாறும் அடியிணையும் - நறுமணங்கமழாநின்ற திருவடியிணையும்,
அவையே அவை காண்மின் காண்மின் - அத்தாமரை மலர்களே அவையிற்றின் அழகைப்
பாருங்கோள், நம் - நம்முடைய, தாமரை நாடன் - தாமரை மிக்க சுரமை நாட்டு
வேந்தனாகிய திவிட்டனுடைய, நகையிலங்கு - ஒளி திகழ்கின்ற, மணியாரம் நவின்ற -
மணிவடம் புனையப் பெற்ற, மார்பம் - மார்பானது, பைந்தாமரை மடந்தை - பசிய தாமரை
மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகள், பாராட்ட - புகழ்ந்து போற்ற, பொலிந்து
இலங்கும்படியும் - அழகுற்று விளங்குகின்ற தன்மையையும், காண்மின் - காணுங்கோள்,
(எ - று.)

     கண்ணுக்குச் செழுமையாவது, கண்ணோட்டம் என்க.

     தாமரை மலரை ஒத்த கண்களையும், கையையும், வாயையும், அடியிணையையும்
உடைய நம்பியின் அவயவங்களின் அழகிருந்தபடியைக் காணுங்கோள், நம்பியின்
ஆரமார்பம் தாமரை மடந்தை பாராட்டுமாறு பொலிந்திலங்குதலையும் காணுங்கோள்
என்றார், என்க.

(401)